வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று (06.16) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, நூற்றாண்டுச் சின்னத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போத தொடர்ந்து பேசிய அவர், ‘2013 ஆண்டு இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடமையாக்கும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்ட சுமார் 6300 ஏக்கர் காணிகளில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
எனினும், குறித்த காணிகள் சட்ட ரீதியாக அரச காணிகளாகவே இப்போதும் காணப்படுகின்றமையினால், 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்ட வர்த்தமானியை மீளப் பெறுகின்ற வகையில் புதிய வர்த்தமானி வெளியிட வேண்டியிருக்கின்றது.
இதுதொடர்பாக, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விரிவாக கலந்துரையாடிய நிலையில், 2013 வர்த்தமானியை மீளப்பெறுவதற்கும், தற்போதும் விடுவிக்கப்படாமல் இருக்கின்ற காணிகளில் முடிந்தளவு விடுவிப்பதற்கும் காணி அளவீடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே காணி அளவீடுகள் மேற்கொள்ளப்படும் போது மக்கள் பரபரப்படையத் தேவையில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.