பொலிஸ் காவலில் இடம்பெறும் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சட்டதரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொலிஸார் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தல், மற்றும் தமது பணியை உரியவாறு நிறைவேற்ற தவறுகின்ற பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வலுவான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் பதிவாகிவரும் பொலிஸ் காவலில் கீழான உயிரிழப்புச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் அதேவேளை பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொலிஸ் காவலின் கீழ் இடம்பெறும் உயிரிழப்புச் சம்பவங்கள் மீள நிகழாமலிருப்பதை உறுதிசெய்ய அவசியமான வழிக்காட்டல்களை தயாரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு கூட உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு வலியுறுத்தியுள்ள சட்டதரணிகள் சங்கம், இவ்வாறான மரணங்கள், உயிர்வாழ்வதற்கான உரிமையை மீறுகின்றதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மாத்திரம் அரசின் கடமையல்ல எனவும் அதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குவதும், சட்டத்தை மீறுபவர்களை தண்டிப்பதும் அரசின் கடமை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.