மடு அன்னையின் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மன்னார் மடு திருத்தல வருடாந்த திருவிழா தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (27.06) காலை மன்னார் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் உற்பட அழைக்கப்பட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக இராணுவம்,பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், குடி நீர், போக்குவரத்து, சுகாதாரம், வைத்திய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. கடந்த 23ம் திகதி கொடியேற்றத்துடன் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பமானது.

தொடர்ந்து நவநாள் திருப்பலி தமிழ் சிங்கள மொழிகளில் ஒப்புக் கொடுக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் 2ம் திகதி (02.07) காலை 6.15 மணிக்கு மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை ஒப்புக் கொடுக்க உள்ளனர்.

இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் மடு அன்னையின் ஆசி பெற வருகை தர உள்ளமையினால் சகல விதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply