எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை எதிர்வரும் செம்படம்பர் மாதம் 15 ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குறித்த வழக்கு இன்று (10) காலை நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது 2021 ஆம் ஆண்டு X-Press பேர்ள் கப்பல்  அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை என மீனவ சமூகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கவலை தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த  சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே  அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.  இதனையடுத்தே நீதிபதிகள் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

மேலும் குறித்த மனு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply