பேராதனை வைத்தியசாலையில் 21 வயது இளம் பெண்ணின் மரணத்திற்கு காரணமான தடுப்பூசியின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, பேராதனை வைத்தியசாலையில் Ceftriaxone மருந்தினால் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பில் என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக இந்த மருந்தை பயன்படுத்துமாறு கூறப்பட்டபோது யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை எனவும், இதன்காரணமாகவே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் பேராதனை வைத்தியசாலை தவிர பிற வைத்தியசாலைகளிலும், இந்த மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தற்போதும் அந்த மருத்துவமனைகளில் இந்த மருந்தே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் யுவதியின் உயிரிழப்பை தொடர்ந்து இந்த மருந்தை பாவிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகவும், மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், அமைச்சர், மருந்துப் பொறுப்பு கூடுதல் செயலாளர், மருத்துவ வழங்கல் பிரிவு இயக்குநர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், தரமான ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.