விண்ணப்பதாரர்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதன் காரணமாக, இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்ப முறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைரேகைகளை முறையாகப் பதிவு செய்யாமை, சுயவிபர தகவல்களை முறையாகச் சமர்ப்பிக்கத் தவறியமை, இணையத்தளத்தில் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமை ஆகியன அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளாக இருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் கடவுச்சீட்டு முறையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட 35,000 விண்ணப்பங்களில், 3,700 கடவுச்சீட்டுக்களை மட்டுமே தற்போது வழங்க இயலுமானதாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களை தொடர்பு கொண்டு பிழைகளை சரிசெய்துகொண்டு, அதன் பின்னர் இணையவழி கடவுச்சீட்டுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் கடவுச்சீட்டு முறை தொடர்பான அனைத்து தேவையான விவரங்களையும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதை கவனத்திற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.