மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப் போட்டி பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு இயேசு சபை துறவிகளின் மேலாளர் அருட்தந்தை சகாயநாதன் மற்றும் 150 வது வருட நிறைவு குழுவின் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி பி.பிரேம்நாத் ஆகியோரின் இணைத்தலைமையில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (29.07) இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு பிரபல பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கிடையே இப்போட்டியானது சினேகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இச்சுற்றுப் போட்டியில் சிவானந்தா தேசிய பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி, இந்துக்கல்லூரி மற்றும் புனித மிக்கேல் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

பாடசாலைகளிற்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்துமுகமாக இப்போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததுடன், மாவட்டத்தில் முதல் தடவையாக பழைய மாணவர்ளுக்கிடையில் கடினப்பந்து கிரிக்கட் போட்டி இடம் பெறுவது இதுவே முதற் தடவையாகும் என தெரியவருகிறது.

இந்நிகழ்விற்கான பிரதான அனுசரனை வழங்குனர்களாக பொகவந்தலாவ தேயிலை மற்றும் டிசைனர் இஸ்மைல் பற்சிகிச்சை நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க உபதலைவர் இயேசு சபை துறவி அருட்தந்தை சுவைக்கின் ரொசான் அடிகளார், சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் கே. சுவர்னேஸ்வரன், மெதடிஸ் மத்திய கல்லுரியின் அதிபர் கே.பாஸ்கரன், இந்துக் கல்லூரியின் அதிபர் கே.பகிரதன், புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் அதிபர் ஆர்.ஜே.பிரபாகரன் புனித மிக்கேல் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உருப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
