கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பயிற்சியின்றி அல்லது முன்பள்ளி கற்கைநெறி அது தொடர்பான பயிற்சி இன்றி முன்பள்ளிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடுவலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முறையான பொறிமுறையின்றி சிறுவர்களின் மனநிலை குழப்பமடைவதாகவும், பாடசாலை கல்வியினால் அதனை சீர்செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு முதல் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் தரம் ஒன்று முதல் ஆங்கில பாடத்தினை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த வருடம் தரம் ஒன்றுக்கான கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் 13,800 ஆசிரியர்கள் பயிற்சியினை பெற்றுக்கொண்டதுடன், இந்த நிலைமையினை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்குரிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதற்கு யுனிசெப் உதவியுடன் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.