விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம். எதிர்க்கட்சி கண்டனம்

விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பதவி நீக்கத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இன்று(27.11) சஜித் பிரேமதாசாவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆணையின்றி ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி, நாட்டின் சட்டத்தை கூட மீறி விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்க அவர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்து, இத்தோடு நின்று விடாது, ஊழல் நிறைந்த கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளையும் முடக்கி, அவரை விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியில் இருந்தும்,ஏனைய அமைச்சுப் பதவிகளில் இருந்தும் நீக்க எடுத்த முட்டாள்தனமான முடிவை ஜனநாயகத்தை மதிக்கும் எதிர்க்கட்சி என்ற வகையில் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களால் விரும்பப்படும் கிரிக்கெட் விளையாட்டு, தற்போது மிகவும் ஊழல் நிறைந்ததாக மாறியுள்ளது. நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களை விரட்டியடித்த பின்னர், இவ்வாறான ஊழல் ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கவில்லை. குரோனி முதலாலித்துவம், நட்பு வட்டார முதலாளித்துவம் கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது படையெடுத்து மக்கள் நேசித்த கிரிக்கெட் விளையாட்டை அழித்துவிட்டது. இந்த நட்பு வட்டார வாதத்திற்கு எதிராக அச்சமின்றிப் போராடிய தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரின் பணிகளில் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தலையிட்டு இடையூறு செய்தமை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

நியாயமான காரணமின்றி ஊழல்வாதிகளுக்கு எதிராக போராடிய விளையாட்டுத்துறை அமைச்சரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் மறை கரம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது ரொஷான் ரணசிங்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் வரலாம் என்றபடியால் கட்சி பேதமின்றி நாம் அனைவரும் அவருக்காக முன் நிற்ப்போம்.

Social Share

Leave a Reply