பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுவதை போன்ற புண்ணியம் ஏதுமில்லை

ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமம் என்ற கொள்கைகயை பின்பற்றி தனது காணியை வத்தளை வாழ் தமிழ் பிள்ளைகளின் பாடசாலை கனவுக்காக வழங்கிய மாமனிதர் அமரர் மாணிக்கவாசகம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வத்தளை அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயத்தில் நடைபெற்ற கல்லூரி ஸ்தாபகர் அமரர் மாணிக்கவாசகம் சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இவ்வாறு கருத்து தெரிவித்தார்,

சுமார் முப்பது வருடங்களாக பெரும்பான்மை அரசியல்வாதிகள் வத்தளை வாழ் தமிழ் மக்களை ஏமாற்றி வந்தார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் “உங்களுக்கு தமிழ் பாடசாலை கட்டி தருவேன்”, என்று சொல்லி வாக்குகளை பெற்று அப்பாவி தமிழர்கள் ஏமாற்றுவது தொடர்ந்து நிகழ்ந்து வந்தன. இதற்கிடையில் இங்கே வத்தளையில் இன்னொரு காணியில் சில எடுபிடி தமிழர்கள் இதே மோசடி அரசியல்வாதிகளை அழைத்து சென்று பலமுறை அடிக்கல்கள் நாட்டி ஏமாற்றியதும் நடந்து வந்தது.

இவ்வேளையில்தான் இறைவனின் பிரதிநிதியாக, 2019 வருடத்தில் சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரணமுள்ள தனது சொந்த காணியை அரசுக்கு வழங்கி வத்தளையில் அரசாங்க தமிழ் பாடசாலை அமைக்க மாமனிதர் அமரர் மாணிக்கவாசகம் என்னை தொடர்புகொண்டார். மக்களின் பிரதிநிதியாக நான் பொறுப்புடன் நடந்துக்கொண்டேன் என நினைக்கிறேன். அரசாங்க தமிழ் பாடசாலை அமைக்க அரசுக்கு காணிகளை வழங்கும் போது, நாம் கவனமாக செயற்பட வேண்டும் என்பதை நல்ல மனம் கொண்ட அவரது கவனத்துக்கு நான் கொண்டு வந்தேன்.

தமிழ் பாடசாலை அமைக்க காணியை அமரர் மாணிக்கவாசகம் மனமுவந்து வழங்குவதை “சரி, சரி தாருங்கள்” என வாங்கிக்கொண்டு, கடைசியில் பெரும்பான்மை இன பாடசாலைக்கு அந்த காணியை, பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் திருப்பி விடுவார்கள். கண்டியில் இப்படிதான் ஒரு தமிழ் தனவந்தர் ஒரு காலத்தில் தமிழ் பாடசாலைக்கு வழங்கிய காணியில் இன்று சிங்கள பாடசாலை இருக்கிறது. காணியை வழங்கிய அந்த தமிழ் தனவந்தரின் பெயர்கூட, பாடசாலை காணியின் சரித்திரம் கூட இப்பொழுது அங்கே எவருக்கும் தெரியாது.
சிங்கள பிள்ளைகளுக்கும் பாடசாலை தேவைதான். ஆனால், இங்கே சிங்கள பாடசாலைகள் அநேகம் உள்ளன. எமது பிரச்சினையே, வத்தளையில் முழுமையான தமிழ் பாடசாலை இல்லவே இல்லை என்பதுதானே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்பதையும் நாம் தீர்மானித்தோம்.

அதன்பிறகு நான் ஒரு அமைச்சரவை அமைச்சராக, இது தொடர்பில் ஒரு அமைச்சரவை பத்திரம் சமர்பித்து, இந்த காணி வழங்கலை ஒரு அமைச்சரவை நடவடிக்கையாக மாற்றினேன். பாடசாலையின் பெயர், மறைந்த தனது மகனின் பெயரில் அமைய வேண்டுமென, பாசமுள்ள தந்தை அமரர் மாணிக்கவாசகம் விரும்பினார். அந்த பெயருடன் “இந்து” என்ற பெயரையும் சேர்க்க வேண்டும் என நான் விரும்பி, அவரின் அனுமதியை பெற்று, இந்த பாடசாலையில் பெயரை “அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம்” என முடிவு செய்தோம். அத்துடன் நான் நிறுத்தவில்லை. “பாடசாலையின் ஸ்தாபகர் தினம், பாடசாலையின் ஸ்தாபகர்களாக அருண் பிரசாந் மாணிக்கவாசகம் அறக்கட்டளை” என்ற விடயங்கள் எனது அமைச்சவை பத்திரத்தில் இடம் பெற்றன.

அது மட்டும் அல்லாமல், இந்த பாடசாலை, தமிழ் இந்து பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உருவாக்கப்படுகிறது. இந்த நோக்கம் ஒருபோதும் மாற்றப்படக்கூடாது. அப்படி அது மாறுமானால், இந்த காணி, மாணிக்கவாசகம் குடும்பத்துக்கு மீள கையளிக்கப்பட வேண்டும் என்ற பிரதான நிபந்தனையையும் நான் எனது அமைச்சரவை பத்திரத்தில் இடம்பெற செய்தேன்.

ஆகவே, இந்த பாடசாலை தமிழ் இந்து பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உருவாக்கப்படுகிறது என்ற நோக்கம் எக்காலத்திலும் மாறாது. அமரர் மாணிக்கவாசகத்தின் பெயரும், நற்கொடையும் மறுக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாது என்பதை இலங்கை அமைச்சரவை தீர்மானித்து விட்டது. இந்த தீர்மானங்களை இன்னொரு அமைச்சரவை தீர்மானம் மூலமாகவே மாற்ற முடியும். வேறு எவராலும் மாற்ற முடியாது. இதுதான் சட்டம்.

Social Share

Leave a Reply