சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றைய தினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இறால் மீன் பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது, மீன்பிடிக்கு உபயோகிக்கப்பட்ட 2 இழுவைப் படகுகளும் ஆயிரக்கணக்கான குஞ்சு மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டதையடுத்து மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த மீனவர்களை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சூசையப்பர் பட்டினம் மற்றும் பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.