ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு..!

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 2024 பெப்ரவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மாணவ, மாணவிகளின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதி ரணில் விகரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும், கற்கும் திறன் கொண்ட, ஆனால் பொருளாதாரச் சிரமங்கள் காணப்படுகின்ற மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதியிள் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

2021ஃ2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் இதுவரை 10 மாதாந்த தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, புலமைப்பரிசில் தொகை அதிகரிப்புடன், 2024 பெப்ரவரி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 6,000 ரூபா மாதாந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் தற்போது பிராந்திய மட்டத்தில் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தேர்வுகள் நிறைவடைந்ததையடுத்து உரிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply