சம்பள முரண்பாடு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு நிதி அமைச்சின் செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ம் திகதி நிதி அமைச்சுக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கு பதில்கள் கிடைக்காமையினால் ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் நிதி அமைச்சுக்கு நேற்று சென்றிருந்தனர்.
இதன்போது, நிதி அமைச்சின் மேலதிக செயலாளரிடம் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள சம்பளக் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது வெளிநாடு செல்லவுள்ள நிதி அமைச்சின் செயலாளர், நாடு திரும்பியவுடன் ஒரு வாரத்திற்குள் அவருடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதாக நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் உறுதியளித்தார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு நிதி அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.