பண்டிகை காலத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள விசேட பஸ் சேவை மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குப் பயணிப்போருக்கு கடந்த 5ம் திகதி முதல் சுமார் 200 மேலதிக பஸ்கள் இயக்கப்பட்டு விசேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இதனுடாக வருமானம் 25 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை மற்றும் மத்திய பஸ் நிலையங்களில் போதிய தொலைதூர சேவை பஸ்கள் இன்மையால் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச, போதிய பஸ்கள் இல்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை, அதிவேக வீதிகளின் வருமானம் நேற்று 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை அதிவேக வீதிகளின் வருமானம் கணிசமான அளவு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.