யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானங்களை அமைக்கும் திட்டம் 

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானங்களை அமைப்பதற்கான ஏது நிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டுள்ளார்.

செம்மணி வளைவு பகுதிக்கு அருகில் உள்ள நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ள நிலையில், குறித்த திட்டத்திற்கு அனுமதியை கோரி யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போது குறித்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் மழைநீர் வழிந்தோடும் வழிகள் இருப்பதால் அப்பகுதியில் மைதானங்களை அமைப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் செம்மணி பகுதிக்கு கள விஜயம் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலைமைகளை அவதானித்ததுடன் விவசாயம் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறையை உள்ளடக்கியதான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து காணொளி வடிவிலான திட்ட வரைபை தயாரிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

Social Share

Leave a Reply