நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று (29) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
இதன்போது போதிய அளவு நீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெளிப்புற செயற்பாடுகளை தவிர்த்தல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.