அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் – ஐ.தே.க அமைப்பாளர்  

ஜனநாயகத்தின் தாயகம் ஐக்கிய தேசியக் கட்சிதான் எனவும் ஜனநாயகம் பற்றி தமது கட்சிக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்று பேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார், அரசியலமைப்பின் பிரகாரம் உரிய முறையில் தேர்தல்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 
“ஜனநாயகத்தை அதிகம் மதிக்கும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியும், தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் உலகலாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் செயற்படாது என்பது ஊரறியும், உலகறியும் விடயமாகும். 

எனினும், எப்போதும் அறிக்கை விடுத்தும், அறிவிப்புகளை விடுத்தும் அரசியல் நடத்தும் வாய்ச்சொல் வீரர்கள், எமது கட்சியின் பொதுச்செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள கருத்தை தூக்கி பிடித்துக்கொண்டு கட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இவற்றை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எமது கட்சியின் பொதுச்செயலாளரால் வெளியிடப்பட்ட கருத்தை ஆழமாக ஆராயாமல் இவ்வாறு அறிவிப்புகளை விடுப்பது சிறுபிள்ளைத்தனமானது. நாட்டு மக்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் மேலதிக சுமை தேவையில்லை, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்ட பின்னர், சுதந்திரமான சூழலில் தேர்தலை நடத்துவதே ஜனநாயக பண்பு என்ற தொனியிலேயே அவர் கருத்தை வெளியிட்டிருந்தார். இது ஒரு கோரிக்கை மாத்திரமே, மாறாக அரசின் முடிவு அல்ல.

நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் எவ்வாறு நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியும் என்பதே அவரின் வாதமாகும். அவரின் கருத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை. எது எப்படி இருந்தாலும் அரசமைப்பின் பிரகாரம் தேர்தல்களை நடத்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக உள்ளார்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply