இணைய குற்றவாளிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர்களை மீட்பதற்காக மியன்மார் சென்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற குழு, அந்நாட்டு பிரதி வெளிவிவகார அமைச்சரையும், அந்நாட்டு பிரதம சங்கநாயக தேரரையும் சந்தித்து கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றைய தினம்(29.05) இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஜே.சி. அலவதுவல, சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார, சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் மியன்மாரின் மியாவாடி பகுதியில் இணைய குற்றவாளிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள 49 இலங்கை இளைஞர்களை மீட்பதற்காக, மியன்மாரின் யங்கூன் நகரில் இருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் Nay Pyi Taw நெபிட்டோ நகரில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
மியன்மார் பிரதமர் சார்பில் அந்நாட்டு வெளிவிவகார பிரதி அமைச்சர் H.E.U. Than Swe அவர்கள் உள்ளிட்ட இராஜதந்திர அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்கேற்றனர். இங்கு இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால், குறிப்பாக இந்த குழுவை மீட்டுத் தருவது தொடர்பான இராஜதந்திர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பை தொடர்ந்து யங்கூன் நகரில் அமைந்துள்ள Shwe Dagon Pagoda மியன்மார் விகாரையில் வசிக்கும் மியன்மாரின் பிரதம சங்கநாயக தேரரான Thanlyin Min Kyaung Sayardaw அவர்களுடனும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
இலங்கையில் மூன்று பிரதான பௌத்த பீடங்களின் (நிக்காய) மகாநாயக்க தேரர்களின் கையொப்பம் அடங்கிய, இளைஞர்களை மீட்பதற்கான விசேட கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை கையளிக்கும் நிகழ்வும் இரவு 07.30 மணியளவில் யங்கூன் விகாரையில் இடம்பெற்றது.