இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுள் 23 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 3 இந்திய மீனவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டணை வழங்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் இன்று(30.07) உத்தரவிட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள் 64 பேரின் வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் இன்று(30) நடைபெற்றது.
இதன்போது, கடந்த ஜூன் 16 மற்றும் 22ம் திகதிகளில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 மீனவர்களுள் 23 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
இவர்களுள் மூவர், இரண்டாவது தடவையாகவும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு 1 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட மூவர் படகு உரிமையாளர்கள் என்பதுடன், அவர்களுக்கு தலா 4 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 3 படகுகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
கடந்த 1ம் திகதி கைது செய்யப்பட்ட 25 மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி வரையும், கடந்த 11ம் திகதி கைது செய்யப்பட்ட 13 மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 8ம் திகதி வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.