இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த தமிழக மீனவர்கள்  

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த தமிழக மீனவர்கள்  

இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையிலான தமிழக மீனவர்கள் கோரிக்கை மனு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் பிரதிநிதிகள் டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை  நேற்று(05.08) சந்தித்து இந்த மனுவை வழங்கியுள்ளனர். 

இதன்போது, சர்வதேச ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவர், காணாமல் போன மற்றொரு மீனவர் மற்றும் இராமநாதபுரத்தில் மீனவர்கள் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவரை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்றும் தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் அனைவரையும் விரைவாக மீட்டு தர வேண்டும், பணியில் இருக்கும் போது மரணம் ஏற்பட்டால் மீனவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் விபத்துக்கள் அல்லாத ஆயுள் பாதுகாப்பு திட்டம் வேண்டும், மீனவர்களுக்கு டீசலுக்காக வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கான இலங்கையின் தூதரை வரவழைத்து, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இனி இடம்பெறக் கூடாது என கடுமையான கண்டனத்தை இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 

இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீனவ பிரதிநிதிகளிடம் மேலும் தெரிவித்ததாவது, 

“கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூடு சம்பவங்கள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளன. மேலும் 273 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 204 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இலங்கை காவலில் மீதமுள்ள 69 மீனவர்களில், 61 பேர் நீதிமன்றகாவலிலும் 8 பேர் தண்டனைகைதிகளாகவும் இருக்கிறார்கள். 3 விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்துக்கும் சுமூகமாக தீர்வுகள் காணப்பட்டு அனைவரும் தமிழகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள்.

இந்திய அரசின் தரப்பில் வெளியுறவுத்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் 4 பேரும் இலங்கை அரசு தரப்பில் 4 அதிகாரிகள் இணைந்து செயல்படும் குழு அமைத்து மீனவர்கள் பிரச்சினைகளை தீர்த்து வருகிறோம். இந்த இருதரப்பு ஆய்வுக்குழு விரைவில் கூட இருக்கிறது. அப்போது அனைத்து பிரச்சினைகளும் சுமூகமாக தீர்க்கப்படும். மீனவர்களின் குறைகளுக்கு உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்துள்ளார். 

இந்த சந்திப்பின் போது பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மாநில மீனவர் அணி தலைவர் முனுசாமி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள், மீனவளத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். 

Social Share

Leave a Reply