‘இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது’

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாக எதிர்காலத்தில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினதும் யாழ். மாநகர சபையினதும் இணைந்த செயற்பாட்டுக்கான முன்மொழிபு வரவேற்கத்தக்கது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி இராமச் சந்திரக் குருக்கள் பாபு சர்மா மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ. உமா மகேஸ்வரனுடனான சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் கூறுகையில், “இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு முழு உரிமையுடைய நாவலர் கலாசார மண்டபத்தைத் தற்போது யாழ்.மாநகர சபை நிர்வாகமே பராமரித்து வருகின்ற நிலையில், சில முரண்பாடுகள் நிலவிய போதும் அதனை இரு நிர்வாகமும் இணைந்து பராமரிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தைப் பெரிதும் வரவேற்கிறேன்.

எதிர்வரும் ஆண்டு நாவலரின் இருநூறாவது பிறந்த ஆண்டு. இந்த ஆண்டிலே புதுப்பொலிவோடு கூடியதாகச் செயற்பாடுகள் அமையவேண்டும் என்றும் அதற்குக் கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பினைச் சிறந்த முறையிலே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், நாவலர் பெருமானுக்கு இப்படி ஒரு விழா எடுப்பதற்கும் வரப்போகின்ற ஆண்டினை நாவலர் ஆண்டாகப் பிரகடனம் செய்வதற்கும் தயாராகவுள்ள நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன் இந்தக் கட்டத்தில் நிலையறிந்து கூட்டாக இணைந்து செயற்படுவதற்கான தீர்மானத்திற்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கும் யாழ். மாநகர சபைக்கும் எனது பாராட்டுகள்” என தெரிவித்தார்.

‘இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது'
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version