முஸ்லிம் சமூகத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது

முஸ்லிம் சமூகத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது

முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் மத உரிமைக்காக அன்று ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 56 ஆவது மக்கள் வெற்றி பேரணி அக்கரைப்பற்று நகரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதா அல்லது எரிப்பதா என்ற பிரச்சினையின் போது தேசியத் தலைவர்கள் என்று கூறிக் கொள்கின்ற ரணிலும் அநுரவும் அந்த மோசமான கொள்கைக்கு எதிராக குரல் எழுப்ப முடியுமாக இருந்த போதிலும் அவர்கள் அதற்காக முன் வரவில்லை.

கோட்டாபய ராஜபக்சவின் அன்றைய பிழையான கொள்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியுமே வீதிக்கிறங்கி போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றது .

அன்றைய சந்தர்ப்பத்தில் கோட்டாபய ராஜபக்ச செய்த இந்த விடயங்களை சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அனுமதித்தார்கள்.

இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவரும் இன மத பேதங்களை மறந்து இனவாதத்தை, மதவாதத்தை துறந்து அனைவரும் ஒற்றுமையாக சகோதரர்களாக வாழும் வகையில் நாட்டை வலுப்படுத்தி ஐக்கிய படுத்துவோம். மக்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்றார்.

விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 5000 ரூபாவுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை வழங்கி குறைந்த தொகையில் குறைந்த செலவில் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வழியமைப்போம். இதற்கு மேலதிகமாக மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தையும் வழங்குவோம்.

மேலும் வறுமை அதிகரித்து காணப்படுகின்றமையால் நாட்டு மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். எனவே வறுமையை ஒழிப்பதற்காக புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அதனூடாக வரிய குடும்பம் ஒன்றுக்கு 24 மாதங்களுக்கு மாதம் ஒன்று தலா 20000 ரூபா வீதம் ஐந்து பிரிவுகளுக்குள் உள்ளடக்கி வறுமையை போக்குவதற்கான செயற்பாட்டை முன்னெடுப்போம்.

தாம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply