மக்களுக்கெதிராக செயற்பட மாட்டோம் – செல்வம் அடைக்கலநாதன்

மக்களுக்கெதிராக செயற்பட மாட்டோம் - செல்வம் அடைக்கலநாதன்

“நாங்கள் தேசியத்தை தொடர்ச்சியாக நேசிக்கின்றவர்கள் எங்கள் தமிழீழ விடுதலை இயக்கம் மக்களின் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடியது.”

நாங்கள் ஒருபோதும் மக்களுக்கெதிராகச் செயற்பட மாட்டோமென முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் அவரது அலுவலகத்தில் இன்று (07.10)திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்.

“அண்மை காலமாக ஜேவிபி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு ஊழல் சம்பந்தமாகப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச் சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்,வழங்கப்பட்ட மதுபான சாலை உரிமங்களை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பெற்றுள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

“ஆனால், தமிழீழ இயக்கத்தில் இருக்கின்ற எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த மதுபான சாலை உரிமத்தைப் பெற்றிருக்கவில்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.”

அத்தோடு வவுனியாவில் எனக்கு மதுபான சாலை இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். இது உண்மையென நிரூபிக்கப்படுமானால் நான் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.

இந்த ஊழல் சம்பந்தமான விடயத்தில் எமது தமிழீழ இயக்கத்தின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசியத்தை நேசித்து செயற்பட்டவர்கள்.

மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் அந்த வகையில் நாங்கள் இவ்வாறான ஈனச் செயல்களைச் செய்ய மாட்டோம்” என்றார்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply