மக்களின் வாக்கு சங்குச் சின்னத்திற்கே – செல்வம் அடைக்கலநாதன்

மக்களின் வாக்கு சங்குச் சின்னத்திற்கே - செல்வம் அடைக்கலநாதன்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சங்குச் சின்னத்திற்கே மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள் ஏனெனில் 5 கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கும் ஒற்றுமையை மக்கள் காண்கிறார்களென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று(22.10) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் சங்குச் சின்னத்தில் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டோம். பல பேர் பலவாறு பேசினாலும், இந்தச் சங்குச் சின்னம் முதலில் ஒரு சுயேச்சைக் குழுவிற்கு வழங்கப் பட்டிருந்தது. அதன்பின் அதை நாங்கள் எடுத்துக் கொண்டோம் சின்னத்தை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

எங்கள் இனத்தின் எதிரிகள் கூட அந்தச் சின்னத்தை எடுத்துக் கொள்ள முடியும்

எழுச்சி மிக்க எங்களது சங்குச் சின்னமானது இனவாதிகளின் கைக்குப் போய்விடக்கூடாது என்பதற்காக ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தச் சின்னத்தை எடுத்துக் கொண்டோம்.

அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று ஐந்து கட்சிகளையும் யாரும் விரல் நீட்டிப் பேச முடியாது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே ஆயுதமேந்தி இன விடுதலைக்காகப் போராடிய கட்சிகளே இணைந்திருக்கின்றார்கள். எங்களுடைய மக்களின் வாழ்விற்காக அவர்கள் களமிறங்கிப் போராடியவர்கள்.

எங்கள் மக்களுடைய எதிர்கால வாழ்க்கையைச் சரியான முறையில் கொண்டு செல்வது தான் எமது நோக்கமாக உள்ளது.

எங்களின் இந்தச் சங்கு சின்னம் மக்களின் அரணாக மாறவேண்டும் எல்லாக் கட்சிகளும் அணிதிரண்டு ஒரே குடையின் கீழ் வரும் நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply