இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சுவிஸ் நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை (07.12) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பிலான கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும், புதிய அரசாங்கத்துடன் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக பாரளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் சுவிஸ் நாட்டின் வெளிநாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி செயலாளரும், சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவருமான ரிம் எண்டர்லின் (Tim Enderlin), இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் Dr.சிரி வோல்ற் (Siri Walt), இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் மனிதப் பாதுகாப்பிற்கான முதன்மைச் செயலாளர் ஜெஸ்ரின் பொய்லற் (Justin Boillat), சுவிஸ் தூதரகத்தின் மூத்த தேசிய திட்ட அதிகாரி சுசந்தி கோபாலகிருஸ்ணன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம், கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.