கல்வியில் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர எதிர்பார்ப்பு

கல்வியில் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர எதிர்பார்ப்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வழமையான ஒழுங்கில் பரீட்சைகளை நடத்துவதற்கும் பாடசாலை தவணைகளை வழமை போன்று நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் நேற்று வியாழக்கிழமை இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

2026 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகள் திட்டம் வழமைப்போன்று இடம்பெறும்.

2020 ஆம் ஆண்டு கோவிட் 19 தொற்றுநோய் நிலைமை, 2021 ,2022 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமூக நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாடசாலை தவணைக் காலங்கள் அந்தந்த தவணைகளைத் தாண்டிய போதிலும், 2025 ஆம் கல்வியாண்டில், 181 நாட்கள் பாடத்திட்டத்தை பூரணப்படுத்துவதற்கு போதுமான கால அவகாசம் அளித்து, 2025 டிசம்பரில் பாடசாலை தவணையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் பாடசாலை காலத்தை வழமை போன்று பேண முடியும்.

அனைத்து பிள்ளைகளுக்கும் 13 ஆண்டுகள் தொடரான கல்வியை வழங்குவதே அரசின் நோக்கமாகும் என்றும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் மனித வள அபிவிருத்தி, கல்வி முறையில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய பாடத்திட்ட சீர்திருத்தங்கள் மூலம் பாடசாலை முறைமையை புதிய அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்குள் கொண்டுவர எண்ணுகிறோம்.

இதன்போது புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்களைத் தயார்படுத்தல், ஆசிரியர்களுக்கான முறையான பயிற்சி மற்றும் திறன் விருத்தி ஆகியவற்றின் மூலம் கல்வித் துறையில் மனித வளத்தை மேம்படுத்த எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply