நாட்டின் கல்வி முறைமை தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09/12) நடைபெற்ற சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்திலேனும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதோடு, தற்கால உலகை வெற்றிகொள்வதற்கு அவசியமான ஏனைய திறன்களையும் பெற்றிருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
நமது பல்கலைக்கழகங்களால், ஏற்கெனவே பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும், பல்கலைக்கழகக் கல்வியைப் பெறமுடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னமும் இருக்கின்றனர்.
நாட்டில் மூன்றாம் நிலைக் கல்விக்கான சுதந்திரமான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், சர்வதேசத் தரம்வாய்ந்த பிராந்திய உயர்க்கல்வி நிறுவனங்களை இலங்கைக்குள் ஈர்க்க முடிவதோடு, அதன் மூலம் இந்நாட்டில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும்.
காலப்போக்கில், இது இலங்கையின் உயர்க்கல்வித் துறையை பொருளாதாரத்துக்குச் சாத்தியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்ற வருமானம் ஈட்டக்கூடிய ஒரு வழியாக மாறும்.
நாடு விரைவாக அபிவிருத்தியடைந்து, எதிர்காலத்தில் வளமான நாடாக மாற வேண்டுமாயின், இலங்கைக்கு அவசியப்படுவது உயர்க்கல்வி கட்டமைப்பில் பரந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும் என்றும் தெரிவித்தார்.
