சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி ஒப்பந்தம் அம்பலமானது

சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி ஒப்பந்தமானது அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க இன்று (10/12) பாராளுமன்ற அமர்வில் குறித்த ஒப்பந்தத்தை காட்சிப்படுத்தினார்.

அது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர், ‘குறித்த ஒப்பந்தம் அமெரிக்கா நிறுவனத்துடன் அல்லாமல் வேறொரு நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பல முறை கோரப்பட்டிருந்தது. அதனை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொறுப்பான அமைச்சர் காமினி லொகே தெரிவித்தார். ஆனால் அதன் பின்னர் நான் அவரை பாராளுமன்றத்தில் பார்க்கவேயில்லை.

குறித்த ஒப்பந்தம் தொடர்பில் இன்றைய நிதியமைச்சு விவாதத்தில் முக்கியமாக விவாதிக்க வேண்டியுள்ளது. அந்த ஒப்பந்தம் தற்சமயம் என்னிடம் உள்ளது. இலங்கை அரசாங்கம் விற்பனையாளராகவும் NFC Sri Lanka Power Holdings நிறுவனம் பெறுநராகவும் கைச்சாத்திட்ட ஒப்பந்தமே இதுவாகும். இந்த ஒப்பந்தத்தைதான் பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு வலியுறுத்தினோம்.

ஏனென்றால் இது தனியார் சொத்து பரிமாற்ற ஒப்பந்தம் அல்ல. ஏற்கனவே பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான நாட்டின் எரிசக்தித் துறையையும் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்காக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமாகும்.

எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நாம் கூறியும் இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, சபாநாயகர் அவர்களே அந்த ஒப்பந்தத்தை நான் சபைப்படுத்துகிறேன்.

அமைச்சரவையில் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் NFC Sri Lanka Power Holdings என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது முற்றிலும் அமைச்சரவையை மீறிய செயலாகும்’ என்றார்.

சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி ஒப்பந்தம் அம்பலமானது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version