இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாற்றம்.

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான 20-20 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பத்தும் நிஸ்ஸங்க நிதானமாக துடுப்பாடி ஒரு பக்கமாக விக்கெட்டை காப்பாற்றி ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். மறு பக்கமாக தொடர்ச்சியாக விக்கெட்கள் வீழ்த்தப்பட்டமை இலங்கை அணிக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியது. அவிஷ்க பெர்னாண்டோ நீக்கப்பட்டு டினேஷ் சந்திமால் அணிக்குள் கொண்டு வந்த நிலையிலும் சந்திமால் பிரகாசிக்கவில்லை. கடந்த போட்டிகளிலும் இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் இதே சிக்கல் காணப்பட்டது. ஆனால் அதனை இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் திருத்திக்கொள்ளவில்லை.

பத்தும் நிஸ்ஸங்க 46 ஓட்டங்களோடு ஐந்தாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். மத்திய வரிசையில் கமிந்து மென்டிஸ் அதிரடியாக துடுப்பாடி ஓட்டங்களை உயர்த்தினார். ஆனால் அதுவும் தொடரவில்லை. 21(15) ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். இவர் கடந்த இரண்டு போட்டிகளிலும் சேர்க்கப்படவில்லை. தஸூன் சாணக்க ஆட்டமிழக்கமால் 35(25) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இறுதி ஓவரில் வான வேடிக்கை காட்டி ஓட்டங்களை அதிகரித்துக் கொடுத்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மெஹ்தி ஹசன் மிக அபாரமாக பந்துவீசினார். 4 ஓவர்களில் 11 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்களை கைப்பற்றினார். இரண்டாவது தடவை 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். சொரிபுல் இஸ்லாம், முஸ்டபைசூர் ரஹ்மான், ஷமீம் ஹொசைன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த மைதானத்தில் முதலில் துடுப்பாடும் அணிக்கே அதிகம் வெற்றி வாய்ப்புகள் உள்ளன. இலங்கை அணி பெற்றுக்கொண்ட ஓட்டங்களை வைத்து இந்த இலக்கை கட்டுப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே. சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்துவீசி விக்கெட்களை கைப்பற்றினால் மட்டுமே இலங்கை அணிக்கு வெற்றி சாத்தியம்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version