மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடம் கட்டுவதற்கும், மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நேற்று (09.09) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த திட்டத்திற்கு பங்களிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.