ICC ஆண்கள் T20 உலகக்கிண்ணம் 2026 போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அறிவுறுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையை ICC கவனத்தில் எடுத்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிலிருந்து (PCB) அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்க ICC காத்திருக்கிறது. இருப்பினும், தகுதி பெற்ற அனைத்து அணிகளும் போட்டி அட்டவணைப்படி சம உரிமையுடன் பங்கேற்க வேண்டும் என்ற உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் அடிப்படை நோக்கத்துடன், இந்த ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு’ முடிவு பொருந்தாததாக உள்ளது.
ICC போட்டிகள் விளையாட்டு நேர்மை, போட்டித்தன்மை, தொடர்ச்சித் தன்மை மற்றும் நியாயத்தன்மை ஆகிய அடிப்படைகளில் நடைபெறுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு, இந்தப் போட்டிகளின் புனிதத்தை பாதிக்கும் செயல் ஆகும்.
தேசியக் கொள்கைகள் தொடர்பான விடயங்களில் அரசுகளின் பங்கை ICC மதிப்பினாலும், இந்த முடிவு உலக கிரிக்கெட் விளையாட்டின் நலனுக்கும், பாகிஸ்தானில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் உட்பட உலகம் முழுவதிலுள்ள ரசிகர்களின் நலனுக்கும் ஏற்றதாக இல்லை.
இந்த முடிவு, உலகளாவிய கிரிக்கெட் சூழலமைப்பில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும், அந்த அமைப்பின் உறுப்பினராகவும் பயனாளியாகவும் இருக்கும் PCB கருத்தில் கொள்ள வேண்டும் என ICC நம்புகிறது.
ICC ஆண்கள் T20 உலகக்கிண்ணம் 2026 போட்டியை வெற்றிகரமாக நடத்துவது தான் ICC-யின் முதன்மை நோக்கம். இதற்கு PCB உட்பட அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும். அனைத்து பங்குதாரர்களின் நலனையும் பாதுகாக்கும் வகையில், பரஸ்பர ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை PCB ஆராய வேண்டும் என ICC எதிர்பார்க்கிறது.