வடமேற்கு மாகாண சபை வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

வடமேற்கு மாகாண சபை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (03.03) அதிகாலை அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மூலம் குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதிகாலை சுமார் 3.30 மணியளவில் தமிழில் எழுதப்பட்ட மின்னஞ்சல் ஒன்று கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், வளாகத்திற்குள் வெடிகுண்டு ஒன்று வெடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், சயனைடு நிரப்பப்பட்ட குண்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளதாகவும், தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11 மணிக்குள் வெளியேறுமாறும் அந்த மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மோப்ப நாய்கள் உதவியுடன் வளாகத்தில் முழுமையான சோதனையை மேற்கொண்டனர்.

பாதுகாப்பு பரிசோதனை நடைபெறும் நேரத்தில் அரசு அதிகாரிகள் தற்காலிகமாக அலுவலகங்களை விட்டு வெளியேறி, பாதுகாப்பு பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

இந்த மின்னஞ்சலை அனுப்பிய நபரை அடையாளம் காண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply