வடக்கு மாகாணத்தில் பாத்தீனிய ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு மாகாணத்தில் அழிக்க முடியாத பெரும் களையாக உருவெடுத்துவரும் பாத்தீனியத்தை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில், நேற்று (17.03) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், கடந்த ஆண்டுகளில் பாத்தீனிய ஒழிப்புத் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், மத்திய மற்றும் மாகாண அரச நிர்வாகக் கட்டமைப்புகள் இணைந்து இத்திட்டத்தை எவ்வாறு வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு வாரத்தினை பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும், ஏப்பில் மாத இறுதி வாரத்தில் பாத்தீனிய ஒழிப்பு வாரத்தை மேற்கொள்வது என்றும் அதற்கு ஏற்றவகையில் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் மாகாண திணைக்களங்களின் பங்குபற்றலுடன் முன்னாயத்த கூட்டங்களை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட கடற்படைக் கட்டளைத் தளபதி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாக யாழ் மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version