மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிப்பதற்காக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள போதிலும், ஈரானிய ஆட்சி முழுமையாகக் கவிழ்க்கப்படும் வரை போரை நிறுத்தக்கூடாது என்று இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவும் நேரத்தில், அரசாங்கம் உள்நாட்டுச் சட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறி, அவர் இஸ்ரேலிய அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்கத் தளங்கள் அமைந்துள்ள ஜோர்டான் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்கள், உலகளாவிய சந்தைகள் மற்றும் விமானப் பயணத்தில் ஏற்கனவே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.