இலங்கை போக்குவரத்து சபை(SLTB) தினமும் சுமார் ரூ. 2 கோடி வரை இழப்பை சந்தித்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த இழப்புகள் பேருந்து நடத்துனர்கள் மேற்கொள்ளும் மோசடி நடவடிக்கைகள் காரணமாக ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், SLTBயின் பேருந்து சேவைகள் மட்டுமன்றி, அதன் நிர்வாக அமைப்பும் மனிதவள கட்டமைப்பும் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும் இலங்கை போக்குவரத்து சபையை தனியார்மயப்படுத்தும் எந்தத் திட்டமும் இல்லை என அவர் தெளிவாக தெரிவித்ததுடன், “SLTB-யை விற்க மாட்டோம் அதை மேம்படுத்துவோம்” எனவும் அவர் உறுதியளித்தார்.
அமைப்பில் பொறுப்புணர்வு மற்றும் செயல்திறனை மீட்டெடுக்க விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். புதிய விதிமுறைகள் அவசியமெனில் அவை கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய மாற்றங்களுக்கு இணங்காத அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்த அமைச்சர், “மாற்றம் ஏற்படாதவர்கள் நீக்கப்படுவார்கள்” என கடுமையாக எச்சரித்தார்.