மட்டக்களப்பு – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01/01) முதலை இழுத்துச் சென்ற நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மண்டானை திருக்கோவில் 4ஆம் பிரிவைச் சேர்ந்த 55 வயதுடைய இராசநாயகம் விநாயகமூர்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வழமைபோல் மீன்பிடியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆற்றில் இருந்த முதலை அவரை பிடித்து நீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
இந்நிலையில் பலத்த காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டு,பிரேத பரிசோதனைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
