இலங்கையின் புதிய பிரதமராக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவை நியமிப்பதற்கான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்று இதுதொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய இம்மாதத்தின் முற்பகுதியில், அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், குறைந்தது 6 அமைச்சுகள் வரை மாற்றியமைக்கப்படும் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட சில இராஜாங்க அமைச்சுகளுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படும் எனவும், அதன்படி அவற்றின் கீழுள்ள நிறுவனங்களில் மாற்றம் ஏற்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய பி.பீ.ஜயசுந்தரவை, நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் ஆலோசகராக நியமிக்க ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
குறித்த இந்த தகவல்களை தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து விலகும் திட்டம் தமக்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
