சிறை தண்டனை அனுபவித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறையிலிருந்தவாறே உயர்கல்வியை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அவர் இணையத்தளம் மூலம் உயர் கல்வியை தொடர முடியுமென சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மடிக்கணனி ஊடாக இணையத்தளத்தை பயன்படுத்தி, வெளிவாரி பட்டப்படிப்புக்கான விரிவுரைகளில் கலந்துக்கொள்வதற்கும், அவர் படிக்கும் துறைசார்ந்த நூல்கள் உள்ளிட்டவற்றை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இணையத்தளத்தில் நடாத்தப்படும் விரிவுரைகளில் அவர் கலந்துக்கொள்வது சிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரி ஒருவரின் முன்னிலையில் நடைபெறும் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.
