10 பாடசாலைகள் நேற்றையதினம் (08.03) தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடப்பெற்றது.
08 பெண்கள் பாடசாலைகளும் 02 கலவன் பாடசாலைகளும் இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக இலங்கையில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 395 ஆக உயர்வடைந்துள்ளன. 1000 தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் முதற் கட்டமாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக கல்வி அமைச்சின் அனுசரணையில் ‘ஆயிரம் தேசிய பாடசாலைகள்;’ வேலைத்திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த பத்து பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக அறிவிப்பதற்கான பெயர்ப் பலகைகள் பிரதமரினால் அலரி மாளிகையிலிருந்து இணைய தொழில்நுட்பம் ஊடாக ஒரே தடவையில் திறந்துவைக்கப்பட்டதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பருத்தித்துறை மெதடிஸ்ட் உயர் பெண்கள் பாடசாலை, கல்முனை மஹமுத் பெண்கள் பாடசாலை, ஹட்டன் கெப்ரியல் பெண்கள் பாடசாலை, பெலியத்த புவக்தண்டாவ தம்மபால மகளிர் பாடசாலை, பிபில யஷோதரா மகளிர் பாடசாலை, தொம்பே தேவி பெண்கள் பாடசாலை, கெகிராவ வித்யார்த்த மகா வித்தியாலயம், கேகாலை சுவர்ண ஜயந்தி மகா வித்தியாலயம், தங்கொடுவ பௌத்த மகளிர் பாடசாலை மற்றும் வலஹந்துவ ஜனாதிபதி பெண்கள் பாடசாலை ஆகியன இவ்வாறு தேசிய பாடசாலை அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் ஸூம் தொழிநுட்பத்தின் ஊடாக குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினர்கள்.
