நாட்டின் பொருளாதார மீட்சிக்கான புதிய குழு

பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளாதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர், பேராசிரியர் சாந்தா தேவராஜன், நிறுவனத் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் IMF இன் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி திருமதி ஷார்மினி குரே ஆகியோர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இன்று சந்தித்த வேளையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் உரிய தேவைகளுக்காக தொடர்ந்தும் தொடர்பாடல்களைப் பேணுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், தற்போதைய கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாணல் மற்றும் இலங்கையின் நிலையான மீட்சிக்கு அவசியமான வழிகாட்டுதல்களை வழங்குதல், ஆகிய பொறுப்புகள் ஜனாதிபதி ஆலோசனைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதார மீட்சிக்கான புதிய குழு

Social Share

Leave a Reply