எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா அரசாங்கம் மேலும் 50 கோடி டொலரை இலங்கைக்கு வழங்க முன் வந்துள்ளது. இலங்கையில் தொடர்ந்தும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இந்த கடனுதவியினை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சார் G.L பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷுக்கு வழங்கவேண்டிய 450 மில்லியன் டொலர் கடனை மீள வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ள அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்க குறைந்தது 06 மாதங்களாவது செல்லும். ஆகவே சமகால பிரச்சினைகளை தீர்க்க மாற்று நிதிகளை தேடவேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதற் கட்ட 50 கோடி டொலர் எரிபொருள் கடன் மூலம் இலங்கைக்கு எரிபொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே இரண்டாவது தடவையாக இந்தியா இந்த எரிபொருள் கடனை வழங்கவுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்காக 100 கோடி டொலர் கடன் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, மீண்டும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான இறக்குமதிக்கு 200 கோடி டொலரினை இந்தியா வழங்கும் திட்டத்துடன் செயற்பட்டு வருகிறது.
