மண்ணெண்ணெய் விநியோக முறைகேடு – முகாமையாளர் கைது

மன்னார், தலைமன்னார், பியர் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் மக்களுக்கு மண்ணெண்ணெய் பதிவினடிப்படையில் வழங்காமல், இரகசியமாக வேறு சிலருக்கு அதிகளவிலான மண்ணெண்ணெய் விநியோகித்த குற்றச் சாட்டில் அந்த எரிபொருள் நிலைய முகாமையாளர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானதென ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை(17.06) அதிகாலை கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய் மக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு இரவோடு இரவாக சில வசதி படைத்தவர்களுக்கு, நூற்றுக்கணக்கான லீற்றர் மண்ணெண்ணெய் அனுமதியின்றி வழங்கப்பட்டமையினால் அதிகாலை முதல் வரிசையில் மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த மக்களுக்கு மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை.

தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று (16.06) மற்றும் இன்று (17.06) நள்ளிரவு இரு தடவைகள் 6500 லீற்றர் மண்ணெண்ணெய் என சுமார் 13000 லீற்றர் மண்ணெண்ணெய் அதிகாலை மக்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டிருந்தது.

ஒருவருக்கு 400 ரூபா வீதம் 500 பேருக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 1000 பேருக்கு 400 ரூபாய் வீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட நிலையில் மண்ணெண்ணெய் நிறைவடைந்துள்ளது.

குடும்ப அட்டைகளில் பதிவுகளை மேற்கொண்டு மண்ணெண்ணெய் பெற சென்ற நிலையில் 200 நபர்களுக்கு கூட வழங்காத நிலையில் மண்ணெண்ணெய் நிறைவடைந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பொலிசாரும், இராணுவத்தினரும் எரிபொருள் தாங்கியை மக்கள் முன்னிலையில் சோதித்த நிலையில் தாங்கியிலும் மண்ணெண்ணெய் இருக்கவில்லை.

அனுப்பி வைக்கப்பட்ட 13,400 லீற்றர் மண்ணெண்ணெய்க்கு என்ன நடந்தது? என விசாரித்த நிலையில் 250 லீற்றர் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தாக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.ஆனாலும் தங்களுக்கு அவ்வாறு வழங்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர் எரிபொருள் வழங்கப்பட்ட பதிவுகளை சோதித்த நிலையில் அதிகாலையிலேயே பணம் படைத்த சிலருக்கு நூறுக்கு மேற்பட்ட லீற்றர்கள் வழங்கப்பட்டுள்ளத நிலையிலேயே அந்த நிலைய முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மண்ணெண்ணெய் விநியோக முறைகேடு - முகாமையாளர் கைது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version