ஜனாதிபதி – கூட்டமைப்பு தேசிய அரசாங்க பேச்சுவார்த்தை

நேற்று (03.08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ள அதேவேளை தமிழ் மக்களின் நலன் சார்ந்த முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியிடம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்ததாக சாணக்கியன் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தெரிவின் போது கூட்டமைப்பினர் டலஸ் அழகப்பெருவிற்கு வாக்களித்திருந்த போதும், அதனை பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையினை நிறைவேற்றவுள்ளமையினை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கருத்து வெளியிட்டதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக சிறையிலுள்ள தமிழ் அரசியல்கைதிகளில் ஒருதொகுதியினரை மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக விடுதலை செய்வது.

அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன் கணக்காளர் ஒருவரையும் நியமித்தல்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளிலும், பொதுப்பயன்பாட்டுக்குரிய அரச காணிகளிலும் அடாத்தாக முகாமிட்டிருக்கும் இராணுவத்தினருக்கு அக்காணிகளை நிரந்தரமாக வழங்கும் முகமாக, நில அளவைத் திணக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்துதல்.

தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியவளத் திணைக்களம் உள்ளிட்டவற்றால், வடக்கு, கிழக்கு தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துதல்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குதல் மற்றும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை முதலில் வெளிப்படுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உதவுதல். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநிறுத்தவும், உண்மையைக் கண்டறிவதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்தல்.

வடக்கு, கிழக்கிலுள்ள தனியார் காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றி, தமது சொந்த நாட்டில் இன்னும் அகதிகளாக உள்ள எமது மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேற வழிவகை செய்தல்.

கடந்த எண்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் உரிமைக்கான அரசியல் தீர்வுக்காக, காலதாமதமற்ற உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்.

ஆகிய முக்கிய கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முவைத்துள்ளது.

ஜனாதிபதி - கூட்டமைப்பு தேசிய அரசாங்க பேச்சுவார்த்தை

Social Share

Leave a Reply