பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.

வெலிமடை சப்புகடே பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது மகள் வெலிமடை பொலிஸிக்கு செய்த முறைப்பாட்டை தொடர்ந்து தேடுதல் நடாத்திய பொலிஸார் பாழடைந்த கிணற்றிலிருந்து காணாமல் போன பெண்ணின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.

நேற்றைய தினம் (24.08.2022) காணாமற்போன குறித்த பெண்ணின் சடலமானது படுக்கை விரிப்பினால் சுற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள விடுதியொன்றிற்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டிருந்தது.

புரன்வெல பகுதியை சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் வேறொரு ஆணுடன் தொடர்பில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே கொலைக்கான காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version