நுகர்வோர் சேவை அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட முட்டைக்கான புதிய திருத்தியமைக்கப்பட்ட விலைக்கு தாம் இணங்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 42 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் நிர்ணயம் செய்ய நேற்றைய தினம் கூடிய நுகர்வோர் சேவை சபை தீர்மானித்ததாக நுகர்வோர் சேவை அதிகார சபை சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
அப்போது, முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி திரு.குவேர டி சொய்சா, அந்த விலைகளுக்கு தமது வாடிக்கையாளர்கள் உடன்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் வர்த்தமானி அறிவிப்பில் தற்போதுள்ள கட்டுப்பாட்டு விலைகளை விட புதிய விலைகள் குறைந்துள்ளதாகவும் அதில் திருப்தி காண முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி விசாரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அத்துடன், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை விசாரணை முடியும் வரை இடைநிறுத்தி நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.