கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் கூட்டு இணக்கப்பாட்டுக்கான அவசியம்!

கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், நேற்று (23) முற்பகல் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொடவின் தலைமையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் கால்நடை தீவனத் தட்டுப்பாடு, மூலப்பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்துப் பிரச்சினைகள், இறக்குமதி செய்யப்படும் கால்நடைத் தீவனங்களுக்கான அந்நியச் செலாவணி பிரச்சினைகள், முதலியன மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இக்கைத்தொழிலிலுடன் தொடர்புள்ள சகல தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வருவதன் மூலம் தொழில்துறையில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என சுட்டிக்காட்டிய கலாநிதி சுரேன் படகொட, அந்த நிலைமையின் கீழ் முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்திகளின் விலைகளை நிர்ணயிக்க வாய்ப்புஏற்படும்எனவும் சுட்டிக்காட்டினார்.

கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலை ஏற்றுமதி கைத்தொழிலாக மாற்றுவது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட அவர், அதற்காக கூட்டு இணக்கப்பாட்டுக்கு வருவதன் மூலம் தொழில்துறையில் ஈடுபடும் அனைவரும் அதன் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என ஜனாதிபதி எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், அகில இலங்கை முட்டை உற்பத்தி சங்கத்தின் தலைவர் மற்றும் தேசிய விவசாயிகள் அமைப்பின் தலைவர் ஆகியோர் இத்தொழிலில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பான ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தித் துறையின் முன்னேற்றத்துக்காக கூட்டு இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கு முன்வந்தமைய விசேட அம்சமாகும்.அத்தோடு தொழில் பாதுகாப்புக்காக ஜனாதிபதி அலுவலகம் மேற்கொண்டு வரும் தலையீடு அனைவராலும் பாராட்டப்பட்டது.

விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி. அத்தபத்து மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் கூட்டு இணக்கப்பாட்டுக்கான அவசியம்!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version