புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்காமல் பெற்றோர்கள் அல்லது அவர்களது பாதுகாவலர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மனநல மருத்துவர் நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அடக்குமுறையான சூழ்நிலையில், பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு உளவியல் ரீதியாக உளைச்சல் ஏற்படுத்துவது எதிர்காலத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்அவர் தெரிவிக்கையில்,
புலமைப்பரிசில் பரீட்சை சமூக முக்கியத்துவம் வாய்ந்த பரீட்சை, ஆனால் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளை வகைப்படுத்த வேண்டாம். இதைக்கொண்டு பிள்ளைகளை நல்லவர், கெட்டவர், திறமையானவர், திறமையற்றவர் என நினைக்காதீர்கள்.
இந்த புலமைப்பரிசில் பரீட்சை சிறுவயதில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் பரீட்சையாக மாறியுள்ளது. கடந்த கால திறமைகள் எதிர்காலத்திற்கு செல்லாது, குறிப்பாக பக்கத்து வீட்டு பிள்ளையின் பெறுபேறுகள், வகுப்பில் உள்ள ஏனைய பிள்ளையின் பெறுபேறுகளை கொண்டு உங்கள் பிள்ளைகளை எடைபோட வேண்டாம்.
தைரியத்தை ஊக்கத்தை உடைக்க வேண்டாம். பிள்ளைகளை உறவினர்களின் பிள்ளைகளின் பெறுபேறுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து மனக்கசப்பை ஏற்படுத்த வேண்டாம். பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்கொண்டு அதற்காக அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்பை பாராட்டுங்கள்.
பிள்ளைகள் என்ன பெறுபேறுகளைப் பெற்றாலும் அந்த முடிவுகளைப் பாராட்டுங்கள். பலவீனமான புள்ளிகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் சிறப்பாகப் படிக்க அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். உங்கள் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க நேரம் செலவிடுங்கள்,
ஆளுமை மற்றும் சமூக திறன்களின் வளர்ச்சிக்கு இந்த விடயங்கள் மிகவும் முக்கியமானவை.
எனவே இந்த புலமைப்பரிசில் பெறுபேறுகளை கொண்டு நல்ல பெறுபேறுகளைப் பெற்ற பிள்ளைகளை போல, குறைவான பெறுபேறுகளைப் பெற்ற பிள்ளைகளையும் ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் தன்னம்பிக்கை தளராமல் இருக்க அவர்களைப் பாராட்டுவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
