ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எதுவித திருத்தத்தையும் மேற்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் (AITWDU) இன்று தெரிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் முச்சக்கர வண்டி சேவைக்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
பெற்றோல் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் நுகர்வோர் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர். இது முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி தமது போக்குவரத்தை எளிதாக்கும் பயணிகளை நேரடியாகப் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரி அதிகரிப்பு காரணமாக முச்சக்கரவண்டி சாரதிகள் தமது வாகனங்களை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பு செய்வதற்கும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனினும் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றங்களை செய்யாதிருக்க தீர்மானித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
எந்த முச்சக்கர வண்டி ஓட்டுனரும் பயண கட்டணத்தை அதிகரித்தால், அது அவர் தனது சொந்த தொழிலை பாழாக்க செய்யும் செயலாகவே நான் கருதுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிப்பதைப் போன்று எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும், எரிபொருள் அனுமதிச் சீட்டு முறையில் அதனை உள்ளடக்குமாறும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத் தலைவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.