இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று (06.04) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே உலக வங்கி பிரதிநிதிகள் மேற்கண்டவாறு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகத்தை (Parliamentary budget office) நிறுவுதல், அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்தல், நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் முறைமை, சமூகப் பதிவு (Social registry) போன்ற இலங்கையின் அபிவிருத்தி கொள்கைக்கான செயற்பாட்டுத் திட்டத்தினை முழுமையாக்குவதற்கு அவசியமான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கு அவசியமான கால எல்லை என்பன தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது இலங்கையின் அபிவிருத்தி கொள்கை முன்னெடுப்புக்களுக்கு உலக வங்கி வழங்கும் ஒத்துழைப்பிற்கு பாராட்டுத் தெரிவித்த சாகல ரத்நாயக்க இந்த வேலைத்திட்டத்தை சாத்தியமாக்கிக் கொள்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
உலக வங்கியின் இந்நாட்டுக்கான முகாமையாளர் சியோ கன்தா உள்ளிட்ட உலக வங்கி பிரிதிநிதிகளும் பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர் .எச் .எஸ். சமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தனர்.
