பள்ளிவாசல்களுக்கான விசேட பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

அண்மையில் பாணந்துறை மற்றும் அக்குறணை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு தொடர்பில் இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பாணந்துறையில் இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பலத்த பாதுகாப்பது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எனவே, அவ்வாறான அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வகையில் விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அக்குறணை பிரதேசத்தில் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு கிடைக்கப்பெற்றதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் அதே வேளையில், அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறாமல் தடுக்க அக்குறணை பகுதிக்கு விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அலவத்துகொட பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல் நடத்தப்படும் என அழைப்பில் குறிப்பிட்ட திகதி கடந்துவிட்டது எனவும் எனவே இது ஒரு தவறான தகவல் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு போலியான தகவல்களை பரப்பியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரினால் விசேட பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply